Wednesday, July 11, 2007

31. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் சேவைகள்

பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நேரில் மட்டுமின்றி தொலைபேசி, இணையதளம் மூலமும் முதலீட்டாளர்களுக்கு எது வசதியாக இருக்கிறதோ அதற்கு ஏற்ப யூனிட்களில் முதலீடு செய்யவும், அவற்றை விற்றுப் பணமாக்கவும் அனுமதிக்கின்றன.

பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கட்டணமில்லாத தொலைபேசி எண்களைக் (Toll -free numbers) கொண்டிருக்கின்றன. இந்த எண்களைத் தொடர்புகொண்டால், யூனிட்கள் பற்றிய விவரங்கள் மற்றும் சமீபத்திய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், இன்னும் ஒரு படி மேலே சென்று, தொலைபேசி மூலம் யூனிட்களை விற்றுப் பணமாக்கும் வசதி மற்றும் ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்துக்கு மாறும் வசதி போன்றவற்றை தன் முதலீட்டாளர்களுக்கு அளித்து வருகிறது. இந்த வசதியை 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களும் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும், இந்தத் தொலைபேசி மூலமே முகவரி மாற்றம், கணக்கில் இருக்கும் தொகை பற்றிய விவரம் அறிதல், அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் (இ\மெயில் அல்லது ஃபேக்ஸ் மூலம் அனுப்பச் சொல்லுதல்) போன்ற வசதிகளையும் பெறலாம். இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள தனி அடையாள எண்கள் வழங்கப்-பட்டுள்ளன. ஒரு லோக்கல் கால் செலவில் இந்த வசதியைப் பெற-முடியும்.

யூ.டி.ஐ. நிறுவனம் வேறொரு ஏரியாவில் அசத்துகிறது. முதலீட்-டாளர் ஒருவர், யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒன்றில் 10 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம்... அவருடைய கோரிக்கையின் பேரில் முதலீடு 15 ஆயிரம் ரூபாயாகப் பெருகியதும், யூனிட்களை விற்றுப் பணத்தை அனுப்புகிறது.

இதேபோல், ‘என்.ஏ.வி. குறைந்து முதலீடு 9 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் போனால், அதிக நஷ்டப்படாமல் விற்றுப் பணத்தை அனுப்பி விடவும்’ என்று முதலீட்டாளர் சொன்னால் அதையும் செய்து கொடுக்கிறது!

ஹெச்.டி.எஃப்.சி., ரிலையன்ஸ் போன்ற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஏ.டி.எம். மூலம் யூனிட்களை விற்கவும் வாங்கவும் முதலீட்டாளர்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களுடன் ஐக்கியமாகி இருக்கிறது. பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் ஃபைனான்ஸியல் போர்ட்டல்கள் (Financial Portals) ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும் வசதியை முதலீட்டாளர்களுக்கு அளித்து வருகின்றன.
யூனிட்கள் ஒதுக்கீடு, விற்பனை மற்றும் திட்டம் மாறிய விவரங்களை

ஐ.சி.ஐ.சி.ஐ.சி. புரூ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு கோரிக்கையின் பேரில் எஸ்.எம்.எஸ். தகவல் மூலம் அளிக்கிறது.

வழக்கமாக யூனிட்களை விற்ற நாளிலிருந்து மூன்று தினங்களுக்குப் பிறகுதான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அனுப்பும் காசோலை முதலீட்டாளருக்கு வந்து சேரும். இதனை, வங்கிக் கணக்கில் போட்டு பணம் வந்து சேர மேலும் சில நாட்கள் ஆகும். இந்தத் தாமதத்தைத் தவிர்க்கும் வகையில், சில ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனம்.
தன்னுடைய ஹை இன்ட்ரஸ்ட் ஃபண்ட் (High interest fund), சோவரின் கில்ட் ஃபண்ட் (Sovereign Gilt Fund) போன்ற திட்டங்களில், முதலீட்டின் மதிப்பில் 75% தொகையை எப்போது வேண்டு-மானாலும் பணமாக்கிக் கொள்ளும் வசதியை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. அதாவது, இந்தக் குறிப்பிட்ட திட்டங்களில் முதலீடு செய்யும்போதே, முதலீட்டுத் தொகைக்கான காசோலைகளை வழங்கி விடுகிறது. எப்போது பணம் தேவைப்பட்டாலும் முதலீட்டாளர் அந்த செக்கை வங்கியில் போட்டு பணமாக்கிக்கொள்ள முடியும். எடுக்கும் தொகைக்கு ஏற்ப யூனிட்களின் எண்ணிக்கை குறையும்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு இதுபோன்ற கூடுதல் சேவைகளும் ஒரு காரணம் என்று சொல்ல-லாம். போகிற போக்கைப் பார்த்தால் பணம் கூட செலுத்த வேண்டியதில்லை என்று சொன்னாலும் சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது! கடைசி மந்திர வார்த்தை அதுவாகத்தானே இருக்க முடியும்!

நன்றி: நாணய விகடன்! (1-15 ஜீலை, 2007)

0 comments: