Tuesday, September 30, 2008

வங்கிகள்: வட்டி விகிதம்

SBI 1000 நாள் வைப்பு தொகைக்கு 10.5% வட்டி என்று அறிவித்துள்ளது. இப்பொழுது மற்ற வங்கிகள் அதிகபட்சமாக 9.75% தருகிறது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB) 1 - 3 வருட வைப்பு தொகைக்கு 10.5% வட்டி அளிக்கிறது.  777 நாட்களுக்கு 11 % வட்டி!! [அதென்ன 777... சும்மா .. நம்ம நினைவுக்குதான்....]

கேரள வங்கியான கத்தோலிக்க சிரியன் வங்கி ஒரு வருடத்திற்கு 10.7 % வட்டி அளிக்கிறது.

Monday, September 29, 2008

Vanishing Act...!




நன்றி: The NY Times

Wednesday, September 24, 2008

பொருளாதார தீவிரவாதம்!

'காத்ரீனா, ஹன்னா' என மெகா சூறாவளிகளைச் சந்தித்தபோதும் தளராத அமெரிக்கா, சமீபத்தில் வீசிக்கொண்டிருக்கும் பொருளாதாரப்புயலைக் கண்டு மிரண்டுபோயிருக்கிறது. செப்டம்பர் 15-ம் தேதி அலுவலகத்துக்குப் போனவர்கள் அடுத்தடுத்து வந்த செய்தியைக் கேள்விப்பட்டபோது நிலைகுலைந்து போனார்கள். ஆம், கை நிறைய சம்பளத்துடன் பார்த்துவந்த வேலை அன்றைய தினம் பலருக்கும் காலியாகியிருந்தது. பலர் முதலீடு செய்த பணம் ஃபணாலாகிப் போயிருந்தது.

'இது அமெரிக்கக் கவலை' என நாம் தட்டிக் கழித்துவிட முடியாது. அங்கு அடித்த பொருளாதாரப் புயல் இந்தியாவையும் தாக்கக்கூடும் என்று பதற்றம் பெருகிவருகிறது.

அதைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், அமெரிக்கப் புயலுக்கான பூர் வாங்கக் காரணத்தைக் கண்டு பிடிக்கலாம்.

லேமென் குண்டு!

'லேமென் பிரதர்ஸ்' என்ற அமெரிக்க வங்கி, 158 ஆண்டுகள் பாரம்பரியம்
கொண்டது. அமெரிக்காவின் நான்காவது பெரிய வங்கியும்கூட! அந்த வங்கி, திடுதிடுப்பென்று மஞ்சள் கடுதாசி கொடுத்துவிட்டு, ஆயிரக் கணக் கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. இத்தனை பெரிய வங்கி சரிந்து விழுந்ததால் ஆஸ்திரேலியாவில் இருந்து நம் நாடுவரை உலகெங்கும் இருக்கும் பங்குச் சந்தைகள் குலுங்கின. நம்மூர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் துணை நிறுவனம் ஒன்று ஐரோப்பாவில் செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் லேமென் வங்கியில் பல கோடிகளை வைத்திருப்பதால், நம்மூர் ஏ.டி.எம்-களில்கூட நூற்றுக்கணக்கான வர்கள் பதற்றத்தோடு கூடினார்கள். லேமென் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தவர்கள் தொடங்கி, இந்த வங்கிக்குக் கணினி சேவை அளிக்கும் நிறுவனங்கள்வரை பல கம்பெனிகளின் பங்குகள் பாதாளத்தை நோக்கிப் பயணப்பட்டன.

கவிழ்ந்தது காளை!

அமெரிக்காவின் பங்கு மார்க் கெட் அமைந் திருக்கும், 'வால் ஸ்ட்ரீட்'டில் இருக்கும் 'சீறுகிற காளை'யின் சிலை மிகவும் பிரபலம். இந்த காளைதான் 'மிரில் லின்ச்' என்ற நிதி நிறுவனத்தின் சின்னம். இந்தக் காளையும் அன்று குப்புற விழுந்து மண்ணைக் கவ்வியது. நஷ்டத்தில் மூழ்கிக்கொண்டிருந்த இந்த நிறுவனம், எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற கதையாக பேங்க் ஆஃப் அமெரிக்கா என்ற வேறொரு வங்கியிடம் சல்லிசான ஒரு தொகைக்கு விலைபோனது!

மூன்றாவது ஏவுகணை!

அமெரிக்காவைத் தாக்கிய மூன்றாவது ஏவுகணை ஏ.ஐ.ஜி. எனப்படும் 'அமெரிக்கா இன்டர்நேஷனல் குரூப்' என்ற சர்வதேச நிறுவனம். திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்ட இது, வாங்குவதற்குக்கூட ஆட்கள் இல்லாமல் மஞ்சள் கடுதாசி கொடுக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது. இதைப்பார்த்து, 'அய்யய்யோ' என்று அமெரிக்க அரசே துடித்துவிட்டது. காரணம், இந்த வங்கியில் பணிபுரிகிறவர்களின் எண்ணிக்கையே லட்சத்தைத் தாண்டும். பல ஆயிரம் கோடி வியாபாரம் நடக்கும் இந்தக் காப்பீட்டு நிறுவனம் திவாலானால், அதன் தொடர்ச்சியாக நாட்டில் பல பொருளாதார பூகம்பங்கள் ஏற்படும். அதனால், வேறு வழியில்லாமல், அமெரிக்க அரசின் ரிசர்வ் வங்கியான ஃபெடரல் வங்கியே அதை வாங்கி பலரைப் பெரு மூச்சுவிட வைத்தது!

ஆனால், அமெரிக்கர்கள் யாரும் நிம்மதிப் பெருமூச்சு விடவில்லை. ஏ.ஐ.ஜி. அரசுடமை ஆக்கப்பட்ட நாளை, இத்தனை நாளாக ஊருக்கும் உலகுக்கும் தான் உபதேசித்து வந்த 'தாராளப் பொருளாதாரம்' என்ற சித்தாந்தம் சிறுமைப்பட்ட நாளாக நினைத்து வெட் கத்தில் தலை குனிந்து நின்றார்கள்.

இந்தியாவை எப்படி பாதிக்கும்?

குத்தாலத்தில் இடி இடித்தால் கோயம்புத்தூரில் மழை பெய்யாது. ஆனால், இன்று அமெரிக்காவில் இடி இடித்தால் அமைந்தகரையில் புயலே வரலாம். மேலே சொன்ன அமெரிக்க நிறுவனங்கள் அனைத்துமே இந்தியாவிலும் இயங்கிவருகின்றன. குறிப்பாக லேமென் நிறுவனத்தின் மும்பைக் கிளையில் வேலை பார்த்த பலரும் வேலை இழக்கும் அபாயத்தில் இருக்கிறார்கள். இன்னொருபுறம் நம்மூரில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்களின் கணிசமான வர்த்தகம் அமெரிக்காவில் இருக்கும் நிதிநிறுவனங்களை நம்பியே இருக்கிறது. இந்நிலையில், நம் ஊர் ஐ.டி. கம்பெனிகள் என்னவாகும்? இதில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலை நிலைக்குமா? சுமார் இருபத்து ஐந்தாயிரம் பேர் வேலை இழக்க நேரிடலாம் என்று சொல்கிறது ஒரு கணிப்பு. எப்படிப் பார்த்தாலும் தீபாவளி வருவதற்குள் பல கம்பெனிகளில் வெடிச்சத்தம் கேட்கும் அபாயம் இருக்கிறது - இப்போதே உஷாராக இருப்பது நல்லது!

டெயில் பீஸ்: 'வேடிக்கை மனிதரைப் போலே வீழ்வேன் என்று நினைத்தாயோ...' என்று முஷ்டியை மடக்கியிருக்கும் அமெரிக்க அரசு வங்கித்துறையை மீட்க கணக்கு வழக்கு பார்க்காமல் பல லட்சம் கோடிகளை கொட்ட இருக்கிறது!

இன்னொரு புறம் நமது நாட்டின் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளுக்கும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் அமெரிக்க வங்கிகளுக்கும் இடையே பெரிய 'பற்றுதல்கள்' ஏதும் கிடையாது! அதனால் நாம் 'எஸ்கேப்' என்கிறார் நமது நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

பதில் தெரியாத கேள்விகள்:

இத்தனை லட்சம் கோடிகள் புழங்கும் வங்கிகளிலும் காப்பீட்டுக் கழகங்களிலும் இப்படி ஒரு ஆபத்து வரப்போகிறது என்று ஏன் அவர்கள் முன்கூட்டியே கணிக்கவில்லை? இத்தனைக்கும் இந்த கம்பெனிகள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இதில் பலரும் ஹார்வர்ட், கேம்பிரிட்ஜ் என்று புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். ஏன் இவர்களுக்குக்கூட தங்கள் நிறுவனத்துக்கு வரவிருக்கும் ஆபத்து முன்கூட்டியே தெரியவில்லை என்ற கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.

காரணம் பொருளாதாரத் தீவிரவாதமா?

அமெரிக்க வங்கிகளும் காப்பீட்டுக் கழகங்களும் ஃபணாலாகும் இந்த நேரத்தில் தங்கத்தின் விலை சர்ர்ர்ர் என்று ஏறுகிறது! 145 டாலருக்கு விற்பனையான கச்சா எண்ணையின் விலை 100 டாலராகக் குறைந்துவிட்டது. எந்தவிதமான பௌதீக, ரசாயன, பொருளாதார விதிகளுக்கும் உட்படாமல் இப்படி நடப்பதற்குக் காரணம், அரபு நாட்டவர்களால் நடத்தப்படும் பொருளாதாரத் தீவிரவாதமாக இருக்குமோ என்ற ரீதியிலும் அமெரிக்கர்கள் சிலர் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ரியல் எஸ்டேட் என்னவாகும்?

இந்திய பங்குச் சந்தை சம்மேளனங்களின் தலைவரான நாகப்பனிடம் கேட்டோம்.

'' 'தசாவதாரம்' படத்தில் சொல்லப்படும் 'கேயாஸ் தியரி' நம் கண் முன்னால் நிரூபண மாக இருக்கிறது. அமெரிக்காவின் நிதி நிறுவனங்களை நம்பித்தான் நம்மூரில் பல ஐ.டி. கம்பெனிகள் இயங்குகின்றன. இந்த கம்பெனிகளுக்கு மென் பொருள் உற்பத்தி செய்து கொடுப்பதுடன் அந்த வங்கியின் கால் சென்டர்களாக இயங்குவதுவரை பலதரப்பட்ட பணிகளைச் செய்வது நம்மூர் கால் சென்டர்கள்தான். அமெரிக்காவின் பல வங்கிகளும் காப்பீட்டுக் கழகங்களும் சீட்டுக்கட்டு மாதிரி சரிந்துவருவதால், நம்மூர் ஐ.டி. கம்பெனிகளுக்கு பலத்த பாதிப்பு ஏற்படலாம். ஏன் பலர் வேலை இழக்கவும் நேரிடலாம் என்கிறது ஒரு கணிப்பு. இவர்களில் பெரும்பாலோனோர் கடன் வாங்கி வீடுகள் வாங்கியிருப்பார்கள். தவணைத் தொகை எக்குத்தப்பாக எகிறியிருக்கும் இந்த நேரத்தில் வேலையும் போனால் ஒரே சமயத்தில் பலர் வீடுகளை விற்க முயற்சிப்பார்கள். இன்னொரு புறம் புதிதாகக் கட்டப்பட்டு விற்பனைக்கு வரவிருக்கும் வீடுகளை வாங்கவும் ஆட்கள் இருக்க மாட்டார்கள். அதனால் ரியல் எஸ்டேட் மார்க்கெட் அடிவாங்கும். இதனால், மத்தியதர மக்களுக்கு எட்டாத உயரத்துக்குப் போய்விட்ட வீடுகள் ஓரளவு அவர்கள் கைக்கெட்டும் தூரத்தில் வரலாம். வீட்டு வாடகை கணிசமான அளவுக்குக் குறையலாம்.

ரியல் எஸ்டேட் கம்பெனி என்றால், வெறும் வீடு விற்பனை செய்பவை மட்டுமல்ல. அதையும் தாண்டி சாதாரணமான பொதுமக்களின் கண்ணுக்குப் புலப்படாத பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இங்கே இருக்கின்றன. இவற்றின் வேலையே பங்குச் சந்தையில் முதலீட்டைத் திரட்டி விலை மலிவாக இருக்கும் நேரத்தில் நூற்றுக்கணக்கில் வீடுகளையும் ஏக்கர் கணக்கில் நிலங்களையும் வளைத்துப் போடுவதுதான். பிறகு, ஒரு கட்டத்தில் இவர்களே செயற்கையாக வீடுகளின் விலையை ஏற்றுவார்கள்.

'அடுக்கு மாடி வீடுகளின் விலையெல்லாம் எகிறுகிறது!' என்று பிரஸ்மீட் வைத்து காரணங்களை அடுக்கி ஊர் உலகத்தை நம்பவைத்து விலை ஏறும்போது சல்லிசான விலையில் தாங்கள் வாங்கிப்போட்ட சொத்துக்களை கொழுத்த விலைக்கு விற்றுக் காசாக்குவார்கள். இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தும் ரியல் எஸ்டேட் சந்தையின் ஏற்றமும் இறக்கமும் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் நம்மூர் ரியல் எஸ்டேட் மார்க்கெட்டிலும் இருக்கிறார்கள்..! இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்!

- பி.ஆரோக்கியவேல்

நன்றி; ஜூனியர் விகடன்

Monday, September 22, 2008

கச்சா எண்ணெய் - வரலாறு காணதளவு உயர்வு

கச்சா எண்ணெய் விலை வரலாறு காணதளவு ஒரே நாளில் $16.27 (16 %) விலை கூடி, $120.92 யில் முடிவடைந்துள்ளது.

 
 

நன்றி: CNBC

கேலிச்சித்திரங்கள் ..


நன்றி: TIME

Thursday, September 18, 2008

குழந்தைகளுக்கான சேமிப்பு வழிகள்

'இந்தப் பிள்ளைகளைக் கரைசேர்க்க ஒரு வழி பண்ணிட்டாப் போதும்...' என்பதுதான் இந்தியப் பெற்றோர்களின் உச்சகட்ட கவலையாக இருக்கிறது. தங்களின் ஓய்வுக் காலத்துக்குச் சேமிக்கிறார்களோ இல்லையோ.. தங்கள் மகள் மற்றும் மகன்களின் கல்வி மற்றும் திருமணச் செலவுக்கு எப்பாடுபட்டாவது சேமிப்பதை ஒரு தவமாகவே கொண்டிருக்கிறார்கள். அதுவும் பெண் குழந்தைகள் என்றால் அவர்களின் கடமை இன்னும் பல மடங்கு கூடிவிடுகிறது.

''ஒரு பிள்ளைக்கு இரண்டு ஆண்டு எம்.பி.ஏ. படிப்பை முடிக்க இப்போது சுமார் 7 லட்ச ரூபாய் செலவாகும். இதுவே, இன்னும் 15 ஆண்டுகள் கழித்துப் படிக்கும்போது சுமார் 30 லட்ச ரூபாய் இருந்தால்தான் நிலைமையைச் சமாளிக்கமுடியும். அந்த அளவுக்கு பணவீக்க விகிதம் மற்றும் கல்விச் செலவுகள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. ஆனால், இதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. முறையாகத் திட்டமிட்டு குழந்தைகளின் எதிர்காலத்துக்காகச் சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொண்டு வந்தால், அனைத்தையும் சுலபமாகச் சமாளிக்கலாம்'' என்கிறார், மதுரையைச் சேர்ந்த முதலீட்டு ஆலோசகர் பி.ஆர்.டி.கோவர்தனன் பாபு.

அவரே தொடர்ந்து, ''குழந்தை பிறந்த உடனே அதற்காகச் சேமிக்க ஆரம்பிப்பதுதான் சிறந்தது. ஒரு தம்பதி, குழந்தை பிறந்த உடன் மாதம் தோறும் எஸ்.ஐ.பி. முறையில் 2,000 ரூபாய் முதலீடு செய்துவருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 15% வருமானம் கிடைத்தால் 17 வயதில் அந்தப் பிள்ளை கல்லூரிக்குப் போகும்போது அது 16.70 லட்சம் ரூபாயாகப் பெருகியிருக்கும். அதுவே, குழந்தை பிறந்து ஓராண்டு கழித்து முதலீட்டைத் தொடங்கி இருந்தால், அத்தொகை 14.30 லட்ச ரூபாயாகத்தான் இருக்கும். அதாவது, முதலீட்டில் 24 ஆயிரம் ரூபாய்தான் குறைந்திருக்கும். ஆனால், வருமானத்தில் 2.40 லட்ச ரூபாய் குறைந்து போயிருக்கும். எனவே, எவ்வளவு இளம் வயதில் முதலீட்டை ஆரம்பிக்கிறீர்களோ, அதற்கு ஏற்ப அதிக தொகை கிடைக்கும்'' என்றார்.

கோவர்தனன் பாபு சொன்னது போல குழந்தைகளுக்காகச் சேமிக்கும் ஆட்கள் யார் என்று தேடியபோது சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வெங்கடேஷ் சிக்கினார்.

''வெங்கடேஷ் மட்டுமல்ல... பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் தவறாக இது இருக்கிறது. குறைவான வருமானத்தைக் கொடுத்து வந்தாலும், சில்ரன்ஸ் பிளான்கள் என்று இருக்கிற மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் இன்ஷூரன்ஸ் திட்டங்களைத்தான் தேர்வு செய்துவருகிறார்கள். இப்படி தேர்ந்தெடுப்பதைவிட நல்ல ரிட்டர்ன் தரக்கூடிய திட்டங்களைத் தேர்வு செய்வதுதான் சரியானதாக இருக்கும்'' என்றதோடு, ஒருவர் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக எவ்வளவு சேமிக்கவேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.




''ஒருவரின் மாதச் சம்பளத்தில் அவரின் செலவு மற்றும் இதர வாய்ப்பு வசதிகளைப் பொறுத்து 25-40% வரை சேமிக்கமுடியும். அனைவருக்குமான பொதுவான ஃபார்முலா சம்பளத்தில் சேமிப்பு என்பது 30% ஆக இருக்கிறது. இந்த சேமிப்புத் தொகையில் குழந்தைகளில் எதிர்காலத்துக்காக 60%-ஐ சேமிப்பது நல்லது. பெண் குழந்தை என்கிறபோது சேமிப்பைச் சற்று அதிகரிப்பது அவசியமாக இருக்கிறது. இது எதற்கு சொல்லி விளக்க வைக்கத் தேவையில்லை..!'' என்றவர், சேமிப்பை எப்படி முதலீடாக்குவது என்பதைப் பற்றிச் சொன்னார்.


''குழந்தையின் வயது 10-12-க்கு கீழ் இருக்கும்போது பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்துவரவேண்டும். 12 வயதுக்கு மேல் ஆகும்போது, ரிஸ்க் இல்லாத, அதே நேரத்தில் ஓரளவுக்கு நல்ல வருமானத்தைத் தரும் 'ஃபிக்ஸட் மெச்சூரிட்டி மியூச்சுவல் ஃபண்ட்' திட்டங்களில் முதலீட்டை மேற்கொள்ளலாம். வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டையும் தேர்வு செய்யலாம். ஆனால், வரிக்குப் பிந்தைய லாபத்தை கருத்தில் கொண்டால் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி திட்டங்கள் லாபகரமானவை...!'' என்றவர், இன்ஷூரன்ஸ் திட்டங்கள் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

''பிராக்டிக்கலாக யோசித்தால் பிள்ளைகளின் எதிர்காலத் தேவைக்காக இன்ஷூரன்ஸ் திட்டங்களை எடுப்பது புத்திசாலித்தனம் அல்ல. சிறு குழந்தைகளுக்கு காப்பீடு தேவையில்லாத ஒன்று. இதற்குப் பதில் முழுமையான முதலீட்டுத் திட்டத்தில் பணத்தைப் போட்டுவந்தால் அவர்களுக்கான தேவையைச் சுலபமாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். மேலும், பிள்ளைகளின் எதிர்காலத் தேவைக்கான முதலீட்டை பெற்றோர்களின் பெயரிலே எடுப்பதுதான் நல்லது'' என்றார்.

சென்னை வடபழனியை சேர்ந்த பி.டி.மஹாராஜன் தொழிலதிபராக இருக்கிறார். அவர், ''பிள்ளைகளின் படிப்பு, கல்யாணம் போன்ற செலவுகளுக்காகத் திட்டமிடுவது மட்டுமல்ல... அவர்களுடைய தனிப்பட்ட விருப்பங்களையும் தெரிந்து அதற்கு ஏற்பவும் செயல்பட வேண்டும். என் மகள்கள் காவியா யும், அனன்யாவும் டென்னிஸ் விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார்கள். எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். அதற்கு ஏற்பவும் இப்போதே திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் ரிஸ்க் இருந்தாலும் பங்குச் சந்தையிலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் முதலீட்டைச் செய்து வருகிறேன்'' என்றார்.

மஹாராஜனின் பாதை தெளிவாக இருப்பதாகப் பாராட்டிய கோவர்தனன் பாபு, ''அதிக ரிஸ்க் உள்ள பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்துவரும் நிலையில், பணம் தேவைப்படும் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் அதனை ரிஸ்க் குறைவாக உள்ள அல்லது ரிஸ்க் இல்லாத திட்டங்களுக்கு முதலீட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது, ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்கள் அல்லது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம். அப்போது ஒரு விஷயத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். சந்தை சரிந்திருந்தால், அது சரியாகும் வரை காத்திருந்து முதலீட்டை மாற்றுவதுதான் லாபகரமாக இருக்கும்'' என்றார்.

பொதுவாக பெற்றோரின் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்துதான் முதலீட்டு திட்டங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். சிறிது, நடுத்தரம், அதிக ரிஸ்க் என்று மூன்று வகையாக எடுத்துக் கொள்ளலாம். ரிஸ்க் இல்லாத திட்டங்களாக வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் இருக்கின்றன. சிறிது ரிஸ்க் உள்ள திட்டங்களாக கடன் சார்ந்த பேலன்ஸ்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கின்றன. நடுத்தர அளவு ரிஸ்க் கொண்ட திட்டங்களாக பேலன்ஸ்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும்,. அதிக ரிஸ்க் கொண்ட திட்டங்களாக பங்கு மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கின்றன. அதே நேரத்தில், எடுக்கும் ரிஸ்க்குக்கு ஏற்ப, அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கவேண்டும் என்றால், நாம் செய்யும் முதலீடு தெளிவானதாக இருக்கவேண்டும். திட்டமிட்டுக் கொள்ளுங்கள்!


 நன்றி: நாணய விகடன்

வணிகச் செய்திகள் - செப்டம்பர் 19, 2008

இந்திய வங்கிகளுக்கு பாதிப்பில்லை: ப. சிதம்பரம்

வியாழக்கிழமை காலை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் 705 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன. இந்நிலையில் இந்திய வங்கிகளின் நிதி நிலை நன்றாக உள்ளது என்றும், எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் சிதம்பரம் கூறினார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

இதையடுத்து பங்குச் சந்தை சரிவிலிருந்து மீண்டது. வங்கிகளின் பங்கு விலைகளும் அதிகரித்தன.

இங்குள்ள டாடா-ஏஐஜி கூட்டு காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள காப்பீடுதாரர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அரசிடம் உறுதி அளித்துள்ளதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள வங்கிகள் நிதி நெருக்கடிக்கு உள்ளானதால் பாதிக்கப்படும் அளவுக்கு இந்தியாவில் உள்ள வங்கிகள் இல்லை.

இங்குள்ள பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகின்றன. இங்குள்ள ஐசிஐசிஐ வங்கியும் ஆர்பிஐ விதிமுறைகளுக்குள்பட்டுதான் செயல்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள வங்கிகளுக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக இங்குள்ள வங்கிகளில் மேற்கொள்ள உள்ள நிதிச் சீரமைப்பு நடவடிக்கைகள் ஒருபோதும் நிறுத்தி வைக்கப்பட மாட்டாது என்று அவர் மேலும் கூறினார்.

அவரது அறிக்கை வெளியான பின்பு பங்கு சந்தை, காலையில் இழந்த புள்ளிகள் மீட்க ஆரம்பித்தது. மும்பை பங்கு சந்தையில் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 52.70 புள்ளிகள் ( 0.4 சதவீதம் ) உயர்ந்து 13,315.60 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 29.90 புள்ளிகள் ( 0.75 சதவீதம் ) உயர்ந்து 4,038.15 புள்ளிகளில் முடிந்தது.

~~~

10 கிராம் தங்கத்தின் விலை ரூ.12,915 !!

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி சிக்கலை தொடர்ந்து சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக , உலக அளவில் இன்று பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை விட்டுவிட்டு தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள். எனவேதான் தங்கத்தின் விலை உயர்ந்திருப்பதாக சொல்கிறார்கள்.இன்றைய காலை வர்த்தகத்தில் பார் தங்கமும் ஆபரண தங்கமும் 10 கிராமுக்கு ரூ.1000 உயர்ந்து முறையே ரூ.12,915 ஆகவும் ரூ.12,765 ஆகவும் இருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸூக்கு 870 டாலராக இருக்கிறது.

1980க்குப்பின் இப்போது மீண்டும் சர்வதேச அளவில் ஒரு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து மக்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தையே கருதுவதால் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். எனவேதான் இந்தளவு விலை உயர்ந்திருக்கிறது என்கிறார்கள்.
~~

அமெரிக்க நிதித்துறை நெருக்கடியால் எங்களுக்கு பாதிப்பில்லை : சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தகவல்

அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டள்ள தேக்க நிலையால், அமெரிக்காவுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தையே பெரிதும் நம்பியிருக்கும் இந்திய ஐ.டி., நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்று முதலில் கணிக்கப்பட்டது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் கூட 4,500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது என்று சொல்லப்பட்டது. இதனை மறுத்த கிருஷ்ணன், ஒரு ஊழியர் கூட இங்கிருந்து வெளியில் செல்லவில்லை என்றார். சத்யம் கம்ப்யூட்டர்ஸில் இப்போது 53,000 ஊழியர்களுக்கு மேல் பணியாற்றுகிறார்கள்.

~~

உலகம் முழுவதும் பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி : இந்தியா இழந்ததை மீண்டது

உலகம் முழுவதும் இன்று காலை பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

ஜப்பானில் கடும் வீழ்ச்சியில் இருந்த பங்கு சந்தையை மீற்க, பேங்க் ஆப் டோக்கியோ கூடுதலாக 14.4 பில்லியன் டாலர்களை நிதி சந்தையில் புழக்கத்திற்கு விட்டிருக்கிறது. டோக்கியோ பங்கு சந்தையில் நிக்கியின் சராசரி 3.2 சதவீதம் சரிந்திருக்கிறது.

தென்கொரிய சந்தையில் இன்டெக்ஸ் 3 சதவீதம் குறைந்திருக்கிறது.

ஆசியா முழுவதும் இந்த வாரத்தில் மட்டும் அந்தந்த நாட்டு ரிசர்வ் வங்கிகளால் மொத்தம் 33 பில்லியன் டாலர்கள் நிதி சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டிருக்கிறது.
ஹாங்காங்கின் ஹேங்செங்க் 5 சதவீதம், தைவானின் வெயிட்டட் 4.5 சதவீதம், ஆஸ்திரேலியாவில் 3.5 சதவீதம் குறைந்திருந்தது.
திவால் நிலைக்கு சென்ற ஏ.ஐ.ஜி. இன்சூரன்ஸ் நிறுவத்திற்கு, 85 பில்லியன் கடன் கொடுத்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி காப்பாற்றினாலும் அங்கும் பங்கு சந்தையில் 4 சதவீத சரிவு ஏற்பட்டது.

ஐரோப்பாவிலும் பெரும் சரிவுதான்.

இதனை தொடர்ந்து இந்திய பங்கு சந்தையும் கடும் பாதிப்பிற்குள்ளானது.

* மும்பை பங்கு சந்தையில் காலை 10.00 மணி அளவில் சென்செக்ஸ் 649 புள்ளிகள் குறைந்து 12,613 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 174 புள்ளிகள் குறைந்து 3,833 புள்ளிகளாக இருந்தது.
* கட்டுமானம், டெலிகாம், டெக்னாலஜி, மெட்டல் மற்றும் பார்மா பங்குகள் படு பாதாளத்திற்கு சென்றன.

* பி எஸ் இ இன் எல்லா இன்டக்ஸூமே சிகப்பில் தான் இருந்தன.
* ஆனால் மத்திய அமைச்சரின் பேச்சு மதியம் வெளியான பின்பு இந்திய பங்கு சந்தை மீண்டும் உயிர் பெற்றது.

~~
அமெரிக்க பாராளுமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க லேமன் பிரதர்ஸ், ஏ.ஐ.ஜி., அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
இந்த இரு நிறுவனங்களும் ஏன் இந்த நிலைக்கு வந்தன என்பது குறித்து அமெரிக்க பாராளுமன்றத்தில் ( காங்கிரஸ் ) ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இரு நிறுவனங்களையும் சேர்ந்த இப்போதைய மற்றும் முன்னாள் தலைமை செயல் அதிகாரிகளுக்கு ( சி.இ.ஓ., ) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அக்டோபர் 6 ம் தேதி நடக்க இருக்கும் சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு விளக்கம் அளிக்குமாறு லேமன் பிரதர்ஸ் இன் சி.இ.ஓ., ரிச்சர்ட் ஃபுல்க்கும், 7 ம் தேதி நடக்க இருக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு விளக்கம் அளிக்குமாறு ஏ.ஐ.ஜி., நிறுவனத்தின் சி.இ.ஓ., ராபர்ட் வில்லும்ஸ்டடுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

@@

Wednesday, September 17, 2008

தொடரும் சோகங்கள் ...

ஆகஸ்ட் 2007லிருந்து இன்று வரை அமெரிக்காவில் 13 வங்கிகள் 'திவாலாகி'யுள்ளது. அதில் 2008ல் மட்டும் 11 வங்கிகள்!! 'இதலாம் ஒண்ணுமேயில்லை'கிற மாதிரி மிகப்பெரிய நிறுவனங்களும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது மிகப்பெரிய சோகம்!



இதுவரை அமெரிக்க வரலாற்றில் 'திவாலாகி'யுள்ள மிகப்பெரிய நிறுவனங்கள்:

1. Lehman Brothers  (சொத்து மதிப்பு: $639 billion )
   போன வருடம் 100 $ஆக இருந்த இந்த நிறுவனத்தின் பங்கின் விலை, போனவாரம் 20 $ க்கு வந்து இப்பொழுது 20 காசுக்கு (!) (cent) மூச்சு முட்டிக்கொண்டு இருக்கிறது.

2. MCI Worldcom ($103.9 billion)

3. Enron ($63.4 billion)

4. Conseco ($61.4 billion)

 5. Texaco  ($35.9 billion)

 6. Financial Corp. of America  ($33.9 billion)

 7. Refco ($33.3 billion)

 8. Global Crossing  ($30.2 billion)

 9. Pacific Gas and Electric ($29.8 billion)

10. United Air lines ($25.2 billion). இந்த நிறுவனம் திவாலானது டிசம்பர் 2002ல்!  ஒரு தவறான செய்தியால் போனவாரம் நடந்த கூத்து!
     
****

150 வருட பழமை வாய்ந்த நிறுவனம் மற்றும் அனுபவம் எல்லாம் கதைக்கு ஆகவில்லை! 12 மாதங்களுக்கு முன் 100 $ மதிப்புள்ள பங்கின் விலை இன்று 10 சென்ட்க்குகூட வாங்க ஆளில்லை!

* மோர்கன் ஸ்டான்லி (Morgan Stanley) வகோவியா (Wachovia) வங்கியுடன் இணைய நேரம் பார்த்து கொண்டிருக்கிறது.

* வரும் நாட்களில் WaMu (Washington Mutual)  - Wells Fargo, JPMorgan Chase அல்லது HSBC வங்கியுடன் இணையலாம்.

* AIG யைக் காப்பாற்ற 85 பில்லியன் (8500 கோடி) டாலரை கடனாக வழங்க அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது.

    **  இந்தியாவில், AIG நிறுவனத்துடன் இணைந்து டாடா நிறுவனம் நடத்தும் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு பாதிப்பு எவ்வளவு என்பது இனி தான் தெரியும்

* லேமென் பிரதர்ஸ்க்கு - பிரிட்டனின் பார்ஸ்லேஸ் வங்கி ......

    ** திவாலான லேமென் பிரதர்ஸ் வங்கிக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ரூ. 300 கோடிக்கு மேல் கடன் கொடுத்துள்ளதால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால், அந்த வங்கிகளின் நிர்வாகிகள், பங்குகளை விற்கின்றனர் என பரவிய செய்தியால், அந்த வங்கிப் பங்குகள் சரிந்தன.

    ** லேமென் பிரதர்ஸ் வங்கி, இந்தியாவில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஏராளமாக முதலீடு செய்ததைத் திரும்ப பெறும் என்ற வதந்தி நிலவியதால், தொடர்ந்து ரியல் எஸ்டேட் துறை பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன.

    ** ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, லேமென் பிரதர்ஸ் வங்கியில் செய்த முதலீட்டால் ரூ.250 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியால், எஸ்.பி.ஐ., பங்கு விலை ரூ.56 வரை நேற்று சரிந்தது.

* மெரில் லிஞ்சை பேங்க் ஆப் அமெரிக்கா 50 பில்லியன் டாலருக்கு ($) வாங்கிக்கொள்வதாக சொல்லியிருக்கிறது.

தொடர்புள்ள இணைப்புகள்;

Bear Stearns, Fannie Mae & Freddie Mac, IndyMac: தொடரும் சோகங்கள்

Thursday, September 11, 2008

கச்சா எண்ணெய் -- செப்டம்பர் 11, 2008

சூலை முதல் வாரத்தில் பீப்பாய்க்கு $ 147 ஆக இருந்த கச்சா எண்ணெய் விலை இன்று $100.10 வரை குறைந்து நாளின் முடிவில் $ 100.87ல் இருக்கிறது. அமெரிக்க வெள்ளியின் பலம் கூடியுள்ளது. Hurricane Ike (தமிழ் ?) மெதுவாக மிரட்ட ஆரம்பித்து இருக்கிறது.

100 அமெரிக்க வெள்ளிக்கும் கீழ போன இன்னும் 15 - 20 வரை விலை குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்களின் கணிப்பு. இதற்கிடையில் OPEC [Organization of the Petroleum Exporting Countries ] கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது. ஒரு நாளைக்கு 270,000 பீப்பாய்கள் உற்பத்தியாவதாக ஒரு கணக்கு சொல்லுகிறது.

Hurricane Ike [Category 2 storm]னால் Gulf of Mexico மற்றும் Galveston Bay யிலுள்ள   எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இது போல பாதிப்புகளினால், இது வரை (2008) 15 மில்லியன் பீப்பாய்கள் உற்பத்தி முடக்கப் பட்டது. இது அமெரிக்க தேவையில் மூன்றில் ஒரு பகுதி!!

* 1 barrel = 159 Liters

தொடர்புள்ள சுட்டி:

http://money.cnn.com/2008/09/11/markets/oil/?postversion=2008091110

Tuesday, September 9, 2008

என்ன கொடுமை இது .......?

'என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சா...’ இப்படி காமெடிலாம் நம்ம படத்திலதான் பார்த்திருக்கோம். இது மாதிரி பங்குச்சந்தைல நடந்தா......

அப்படி ஒரு செய்தியால இன்று United Airlines பங்கின் விலை 12% சரிவு. சுனாமி மாதிரி 1 பில்லியன் அமெரிக்க வெள்ளி ”காலி”!

விரிவான செய்தி இங்கே!

Wednesday, September 3, 2008

பங்குச்சந்தை - சில தகவல்கள்

* BSE - ஆசியாவிலே மிகப் பழமையான பங்குச்சந்தை.

* Sensitive Index என்பதுதான் SENSEX.

* 15 விநாடிகளுக்கு ஒரு முறை SENSEX (Index Calculation) கணக்கிடப்படுகிறது.

* SENSEXல் மிகப்பெரிய 30 நிறுவனங்களே உள்ளது. NIFTYல் 50 நிறுவனங்கள்!! எப்படி இந்த நிறுவனங்களை தேர்வு செய்கிறார்கள்..வழிமுறைகள் இங்கே!

* சென்செக்ஸ் கணக்கிடும்பொழுது "Free-float Market Capitalization" முறையை பயன்படுத்திகிறார்கள்.அதாவது அந்த 30 நிறுவனங்களின் பெரும் தலைகளின் பங்குகளை (CEO, CFO, VP...) கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். மாறாக தினமும் வர்த்தகம் ஆகும் பங்குகளே கணக்கில்வரும்.

* 2-3 வருடங்களிலேயே [2003 - 2006]  300 சதவீதத்துக்கும் மேலே இலாபத்தை ஈட்டி தந்த பங்குச்சந்தை SENSEX. உலகவரலாற்றிலேயே இது ஒரு சாதனை!  (இப்ப எதுக்கு இந்த பழைய கதை ...அதுவும் சரிதான்..!!)

* ஒவ்வொரு நாளின் கடைசி சில மணிநேரங்களில் நடக்கும் வர்த்தக்தின் சராசரியே சென்செக்ஸ் ன் closing value.