Thursday, September 18, 2008

வணிகச் செய்திகள் - செப்டம்பர் 19, 2008

இந்திய வங்கிகளுக்கு பாதிப்பில்லை: ப. சிதம்பரம்

வியாழக்கிழமை காலை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் 705 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன. இந்நிலையில் இந்திய வங்கிகளின் நிதி நிலை நன்றாக உள்ளது என்றும், எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் சிதம்பரம் கூறினார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

இதையடுத்து பங்குச் சந்தை சரிவிலிருந்து மீண்டது. வங்கிகளின் பங்கு விலைகளும் அதிகரித்தன.

இங்குள்ள டாடா-ஏஐஜி கூட்டு காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள காப்பீடுதாரர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அரசிடம் உறுதி அளித்துள்ளதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள வங்கிகள் நிதி நெருக்கடிக்கு உள்ளானதால் பாதிக்கப்படும் அளவுக்கு இந்தியாவில் உள்ள வங்கிகள் இல்லை.

இங்குள்ள பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகின்றன. இங்குள்ள ஐசிஐசிஐ வங்கியும் ஆர்பிஐ விதிமுறைகளுக்குள்பட்டுதான் செயல்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள வங்கிகளுக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக இங்குள்ள வங்கிகளில் மேற்கொள்ள உள்ள நிதிச் சீரமைப்பு நடவடிக்கைகள் ஒருபோதும் நிறுத்தி வைக்கப்பட மாட்டாது என்று அவர் மேலும் கூறினார்.

அவரது அறிக்கை வெளியான பின்பு பங்கு சந்தை, காலையில் இழந்த புள்ளிகள் மீட்க ஆரம்பித்தது. மும்பை பங்கு சந்தையில் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 52.70 புள்ளிகள் ( 0.4 சதவீதம் ) உயர்ந்து 13,315.60 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 29.90 புள்ளிகள் ( 0.75 சதவீதம் ) உயர்ந்து 4,038.15 புள்ளிகளில் முடிந்தது.

~~~

10 கிராம் தங்கத்தின் விலை ரூ.12,915 !!

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி சிக்கலை தொடர்ந்து சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக , உலக அளவில் இன்று பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை விட்டுவிட்டு தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள். எனவேதான் தங்கத்தின் விலை உயர்ந்திருப்பதாக சொல்கிறார்கள்.இன்றைய காலை வர்த்தகத்தில் பார் தங்கமும் ஆபரண தங்கமும் 10 கிராமுக்கு ரூ.1000 உயர்ந்து முறையே ரூ.12,915 ஆகவும் ரூ.12,765 ஆகவும் இருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸூக்கு 870 டாலராக இருக்கிறது.

1980க்குப்பின் இப்போது மீண்டும் சர்வதேச அளவில் ஒரு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து மக்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தையே கருதுவதால் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். எனவேதான் இந்தளவு விலை உயர்ந்திருக்கிறது என்கிறார்கள்.
~~

அமெரிக்க நிதித்துறை நெருக்கடியால் எங்களுக்கு பாதிப்பில்லை : சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தகவல்

அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டள்ள தேக்க நிலையால், அமெரிக்காவுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தையே பெரிதும் நம்பியிருக்கும் இந்திய ஐ.டி., நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்று முதலில் கணிக்கப்பட்டது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் கூட 4,500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது என்று சொல்லப்பட்டது. இதனை மறுத்த கிருஷ்ணன், ஒரு ஊழியர் கூட இங்கிருந்து வெளியில் செல்லவில்லை என்றார். சத்யம் கம்ப்யூட்டர்ஸில் இப்போது 53,000 ஊழியர்களுக்கு மேல் பணியாற்றுகிறார்கள்.

~~

உலகம் முழுவதும் பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி : இந்தியா இழந்ததை மீண்டது

உலகம் முழுவதும் இன்று காலை பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

ஜப்பானில் கடும் வீழ்ச்சியில் இருந்த பங்கு சந்தையை மீற்க, பேங்க் ஆப் டோக்கியோ கூடுதலாக 14.4 பில்லியன் டாலர்களை நிதி சந்தையில் புழக்கத்திற்கு விட்டிருக்கிறது. டோக்கியோ பங்கு சந்தையில் நிக்கியின் சராசரி 3.2 சதவீதம் சரிந்திருக்கிறது.

தென்கொரிய சந்தையில் இன்டெக்ஸ் 3 சதவீதம் குறைந்திருக்கிறது.

ஆசியா முழுவதும் இந்த வாரத்தில் மட்டும் அந்தந்த நாட்டு ரிசர்வ் வங்கிகளால் மொத்தம் 33 பில்லியன் டாலர்கள் நிதி சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டிருக்கிறது.
ஹாங்காங்கின் ஹேங்செங்க் 5 சதவீதம், தைவானின் வெயிட்டட் 4.5 சதவீதம், ஆஸ்திரேலியாவில் 3.5 சதவீதம் குறைந்திருந்தது.
திவால் நிலைக்கு சென்ற ஏ.ஐ.ஜி. இன்சூரன்ஸ் நிறுவத்திற்கு, 85 பில்லியன் கடன் கொடுத்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி காப்பாற்றினாலும் அங்கும் பங்கு சந்தையில் 4 சதவீத சரிவு ஏற்பட்டது.

ஐரோப்பாவிலும் பெரும் சரிவுதான்.

இதனை தொடர்ந்து இந்திய பங்கு சந்தையும் கடும் பாதிப்பிற்குள்ளானது.

* மும்பை பங்கு சந்தையில் காலை 10.00 மணி அளவில் சென்செக்ஸ் 649 புள்ளிகள் குறைந்து 12,613 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 174 புள்ளிகள் குறைந்து 3,833 புள்ளிகளாக இருந்தது.
* கட்டுமானம், டெலிகாம், டெக்னாலஜி, மெட்டல் மற்றும் பார்மா பங்குகள் படு பாதாளத்திற்கு சென்றன.

* பி எஸ் இ இன் எல்லா இன்டக்ஸூமே சிகப்பில் தான் இருந்தன.
* ஆனால் மத்திய அமைச்சரின் பேச்சு மதியம் வெளியான பின்பு இந்திய பங்கு சந்தை மீண்டும் உயிர் பெற்றது.

~~
அமெரிக்க பாராளுமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க லேமன் பிரதர்ஸ், ஏ.ஐ.ஜி., அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
இந்த இரு நிறுவனங்களும் ஏன் இந்த நிலைக்கு வந்தன என்பது குறித்து அமெரிக்க பாராளுமன்றத்தில் ( காங்கிரஸ் ) ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இரு நிறுவனங்களையும் சேர்ந்த இப்போதைய மற்றும் முன்னாள் தலைமை செயல் அதிகாரிகளுக்கு ( சி.இ.ஓ., ) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அக்டோபர் 6 ம் தேதி நடக்க இருக்கும் சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு விளக்கம் அளிக்குமாறு லேமன் பிரதர்ஸ் இன் சி.இ.ஓ., ரிச்சர்ட் ஃபுல்க்கும், 7 ம் தேதி நடக்க இருக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு விளக்கம் அளிக்குமாறு ஏ.ஐ.ஜி., நிறுவனத்தின் சி.இ.ஓ., ராபர்ட் வில்லும்ஸ்டடுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

@@

0 comments: