Sunday, June 24, 2007

28. நிரந்தர கணக்கு எண்: பான் (PAN) அட்டை - சில குறிப்புகள்

வரும் ஜூலை 1, 2007 ம் தேதி முதல், மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு, நிரந்தர கணக்கு எண் (PAN-Permanent Account Number ) குறிப்பிட வேண்டும். அதைப் பற்றி பங்காளியின் வர்த்தகத்தில் மியூச்சுவல் பண்ட் முதலீடு இனி குறையுமா? என்று குறிப்பிட்டு இருந்தார்.

இப்பொழுது நடைமுறையில் பங்குச் சந்தை முதலீடு மற்றும் வங்கியில் 50,000 ரூபாய் மேலே பரிமாற்றம் இருந்தால் நிரந்தர கணக்கு எண் (PAN) குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயம். அடுத்த மாதம் முதல் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் 1 ரூ முதலீடு என்றாலும் நிரந்தர கணக்கு எண் (PAN)னை குறிப்பிட வேண்டும்.

டீமேட் (Demat) கணக்குத் துவங்குவதற்கு நிரந்தர கணக்கு எண் - பான் அட்டை அவசியம் என்பது நமக்கு தெரியும். இந்த நிரந்தர கணக்கு எண் பத்து இலக்கம் கொண்டது. உ.தா: AABPS1205E.

வருமான வரி கட்டுபவர்கள் அனைவரும் நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிட வேண்டும். அமெரிக்காவில் Social Security Number ரைப் போல நமக்கு PAN.

UTI வங்கியின் குறிப்பிட்ட கிளைகளின் மூலமோ, இதற்கென படிவத்தை பூர்த்திசெய்து கொடுத்தால், சில நாட்களில் நிரந்தர கணக்கு எண் நம் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.

அந்த விண்ணபத்துடன் இணைக்க வேண்டியவை:

1. ஒரு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ
2. வீட்டு முகவரிக்கான ஆதாரத்தின் நகல்

இவை இரண்டையும் வைத்து விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால் அல்லது உங்கள் நிரந்தர கணக்கு எண் (PAN) மறந்து விட்டது என்றாலோ இங்கு சென்று நம் எண்ணை தெரிந்து கொள்ளலாம்.

இதற்கான செலவு 60 ரூபாய் மற்றும் இதற்குரிய வரி.

நாம் விண்ணப்பித்து 5 - 15 நாட்களுக்குள் நமக்கு கிடைத்து விடும். ஒரு மாதத்திற்கும் மேல் வரவில்லையென்றால் கீழ் கண்ட முகவரிக்கு மின் அஞ்சல் மூலமாகவோ தொலை பேசியின் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

மின் அஞ்சல் முகவரி: pan@incometaxindia.gov.in
இணையதள முகவரி: http://www.incometaxindia.gov.in/

தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 0124-2438000 or 95124-2438000 from NCR)

மேலே குறிப்பிட்ட இணையதளத்தில் படித்தது ... [No Comments.. ! ] :

25. Who can apply on behalf of non-resident, minor, lunatic, idiot, and court of wards?

Section 160 of IT Act, 1961 provides that a non-resident, a minor, lunatic, idiot, and court of wards and such other persons may be represented through a Representative Assessee. In such cases, application for PAN will be made by the Representative Assessee.

Thursday, June 21, 2007

27. மல்டிபர்பஸ் தேசிய அடையாள அட்டை [Multipurpose National Identity Card]

  • அமெரிக்காவில் ஸ்டேஷனரி மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்துவரும் Staples மற்றும் Office Depot நிறுவனங்கள் இந்தியாவில் தன்னுடைய கிளையைப் ஆரம்பிக்க உள்ளது. Office Depot இதற்கான ஃபிரான்ச்சைஸ் உரிமைக்காக பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருக்க , Staples நிறுவனம் Pantaloon நிறுவனத்துடன் 50-50 joint venture க்கு சம்மதம் அளித்துள்ளது.

ஏற்கனவே Pantaloon CEO கிஷோர் பியானி (Kishore Biyani) Starbucks மற்றும் Burger King நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்து இந்தியாவில் இவர்களும் கூடிய விரைவில் தங்களுடைய கிளையை ஆரம்பிக்க உள்ளார்கள். [Pantaloon ஷோ ரூம் க்கு போனால் Starbucks Coffeeயுடன், Burger Kingல் இரவுச் சாப்பாட்டுக்கு Burger வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பலாம். எல்லாவற்றிக்கும் .... ஒரு சில 'காந்தி நோட்டுகள் மட்டும்' தான் வேண்டும்!!!.]

  • போன வருடம், வருமானவரித் துறையில் நடந்த மீட்டிங்கில் இனிப்பு,காரம், காபிக்கு ஏற்பட்ட செலவு மட்டும் 1363 கோடி ரூபாயாம். [அது சரி...!?]
  • சென்னை அருகே ஜீவி பட நிறுவனம் 50 கோடி ரூபாய் செலவில் 100 படுக்கை அறைகள் கொண்ட ஹோட்டல்கள், 10 திரையரங்குகள் என கட்ட திட்டமிட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு இந்தியர்களுக்காக குறிப்பிட்ட தொகை செலுத்தினால் இணையதளத்திலும் திரைப்படங்களை பார்க்கலாம். [இரண்டாவது வெற்றி தருமா எனபது சந்தேகமே...!?]
  • திருப்பூர் ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டி தருகிறது. டாலர் வீழ்ச்சியால், 10 முதல் 15 சதவீதம் வரை திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக சீரான நடவடிக்கை எடுக்காவிட்டால், லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களின் வேலை கேள்விக்குறியாகும்மாம்.
  • 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்திய குடி மக்களுக்கும் "மல்டிபர்பஸ் தேசிய அடையாள அட்டை(Multipurpose National Identity Card (MNIC)" திட்டத்தை அமல்படுத்த உள்ளது. 2002ல் வாஜ்பாய் தலைமையலான அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. குடும்ப அட்டை தகவல்கள், தேர்தல் அடையாள அட்டையிலுள்ள தகவல்கள், வங்கி தகவல்கள், வேலை பார்க்கும் இடம்..... இது போல ஒருவரைப் பற்றிய பல தகவல்களை இந்த ஒரே அட்டையின் மூலம் தெரிந்து கொள்ளமுடியும். இந்த அட்டையில் 16 KB திறன் கொண்ட Micro Chip இருக்குமாம்.
    முதலில் 12 மாநிலங்களில் அறிமுகப் படுத்த உள்ளது. இதில் தமிழ்நாடும் உண்டு.

~~~~~~~~

"முதலீட்டிலிருந்து லாபம் பார்த்து எப்போது வெளியே வர வேண்டும் என்பதைக் கண்டறிய வேண்டும் முதலீட்டின் மதிப்பு அதிகமாகி கொண்டே வருவதால் ஒரு பயனும் இல்லை. அவற்றை இலாபமாக்கும்போது மட்டுமே அதன் பலனை அனுபவிக்க முடியும்."

-- ஜோதிமணி, தலைவர், கேன் பாங்க் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்

"சிறப்பு வேளாண் மண்டலங்களை நிறுவுவதற்கு, அதிகமான விவசாய சக்தி, நீர் ஆதாரமுள்ள நிலங்கள் மற்றும் மானாவாரி நிலங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒருங்கிணைந்த திட்டம், தொழில்நுட்பம், சேவை, உள்கட்டமைப்பு, உற்பத்தி அடிப்படையிலான வணிகம் போன்ற ஒருங்கிணைந்த திட்டங்களை, விவசாய சங்கங்கள், கிராம சபைகளின் மூலமாகவும், தனியார் நிறுவனங்களின் மூலமாகவும் இங்கே அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தனித்தனியாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஒரே இடத்தில் விற்பனை செய்வதற்கு வசதியாக பொது சேவை மையங்களும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்."

-- எம்.எஸ்.சுவாமிநாதன்

@

Tuesday, June 19, 2007

26. ICICI வங்கி IPO

ICICI வங்கி IPO

ஆரம்ப நாள்: ஜீன் 19, 2007
கடைசி நாள்: ஜீன் 22, 2007
விலை: 885 - 950 ரூபாய்

குறைந்தது 6 பங்காவது வாங்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் பங்கு ஒன்றுக்கு 250 ரூபாய் (மட்டும்) செலுத்தி , பங்குசந்தையில் பட்டியல் ஆன பின் ஆறு மாதத்திற்குள் மீதித் தொகையை செலுத்தலாம். மேலும் மொத்தமாக முதலீடு செய்யும் சிறு முதலீட்டார்களுக்கு பங்கு விலையில் 50 ரூபாய் தள்ளுபடியும்(!) உண்டாம்.

அதாவது, சிறு முதலீட்டார்கள் அதிக பட்சம் ஒரு இலட்சம் (தான்) முதலீடு செய்யலாம். இது பொதுவான விதி.

இப்பொழுது நாம் இந்த IPOவில் ஒரு இலட்சம் முதலீடு செய்யப்போகிறோம் என்று வைத்து கொள்வோம்.

குறைந்த விலையான 885 ரூபாய் என்றால், 114 பங்குகள் x 885 ரூ= 1,00,890. இதற்குப் பதிலாக 114 x 250 ரூ= 28,500/- ரூபாய் மட்டும் முதலில் கட்டினால் போதும்.

அல்லது

அதிக விலையான 950 ரூபாய் என்றால், 108 பங்குகள் x 950 ரூ = 1,02,600 . இதற்குப் பதிலாக 108 x 250 ரூ= 27,000/- மட்டும் முதலில் கட்டினால் போதும்.

இது முதல் வகை.

இரண்டாவது.. 50 ரூபாய் தள்ளுபடி...

குறைந்த விலையான 885 ரூபாய் என்றால், 114 பங்குகள் x 885 ரூ = 1,00,890. இதற்குப் பதிலாக 114 x 835 ரூ = 95,190/- ரூபாய் மட்டும் கட்டினால் போதும்.

அல்லது

அதிக விலையான 950 ரூபாய் என்றால், 108 பங்குகள் x 950 ரூ = 1,02,600 . இதற்குப் பதிலாக 108 x 900 ரூ = 97,200 /- ரூபாய் மட்டும் கட்டினால் போதும்.

[வாங்கலாம்]

தேசிய பங்குச் சந்தையில் இன்றைய தேதியின் (ஜீன் 19, 2007) படி இந்த வங்கியின் ஒரு பங்கு விலை 945.15 ரூபாய். அதாவது நேற்று மட்டும் 26.40 ரூபாய் அல்லது 2.87% அதிகரித்துள்ளது.

கூடுதல் செய்தி: ICICI issue oversubscribed 2.7 times on Day One.

Sunday, June 17, 2007

25. சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP)

நாம் போட்ட முதலீடு வளர வளர, அதன் ஒரு பகுதியை நமக்கு கொடுப்பதுதான் சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) .

நாம் முதலீடு செய்த ஃபண்டின் NAV கூட கூட நம்முடைய முதலீடுகள் சிறப்பாக இருக்கும். இவ்வாறு நமக்கு கிடைக்கும் இலாபத்தை டிவிடெண்டாகவோ அல்லது போனஸ் பங்கலகாவோ நமக்கு கிடைக்கும்.

இவ்வாறு நமக்கு கிடைக்கும் இலாபத்தைப் பிரித்து, மாதா மாதம் நாம் குறிப்பிடும் ஒரு தொகை நமக்கு வருமாறு செய்வதுதான் சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) .

அது சரி.. இலாபம் வந்தா நல்லதுதான். எதிர்வினையா போச்சினா....?

நல்ல கேள்வி!

அப்படி போகும் பட்சத்தில் நாம் முதலீடு செய்த தொகையில் இருந்துதான் மாதாமாதம் கொடுப்பார்கள். ஆம்! தொடர்ந்து இப்படி நடக்கும்ப்ட்சத்தில், நம் முதலீட்டுக்கே ஆபத்து வரும் ஆபாயம் உள்ளது.

அதனால கொஞ்சம் யோசித்து அதற்குபின்னே இதற்குறிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.

நமக்கு வரும் ஃபண்டின் statementயை தனியொரு file folderல் சேர்த்து வைத்துக் கொள்ளலாம். ஃபண்ட், பங்கு சந்தை, வங்கி முதலீடு ... இப்படி ஒவ்வொன்றுக்கும் தனி தனி கலரில் ஃபைல் வாங்கி பிரித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் பொழுது எளிதாக இருக்கும்.

ஏனெனில் ஒவ்வொரு statementலும் கவனிக்க வேண்டிய சில விடயங்கள் இருக்கிறது.

1. கணக்கு எண் (Account #)

2. விலாசம் (Address)

3. மொத்த பங்கலகுகள் (Total Units)

4. அதன் மொத்த மதிப்பு (Total Value)

5. வங்கி, விலாசம் /தொலைபேசி எண் மாற்ற அதற்குரிய படிவம்

6. அடிஷனல் பர்ச்சேஸ் ரிக்வெஸ்ட் (Additional Purchase Request)

7. ரிடம்ப்ஷன் ரிக்வெஸ்ட் (Redemption Request)

8. ஸ்விட்ச் ரிக்வெஸ்ட் (Switch Request)

இதில் ஸ்விட்ச் ரிக்வெஸ்ட் (Switch Request) என்பது நம்முடைய மொத்த முதலீட்டையோ அல்லது அதில் ஒரு பகுதி பங்கலகுகளையோ வேறொரு திட்டத்துக்கு மாற்றிக் கொள்ளலாம். ஆனால், அந்த திட்டம் அதே நிறுவனம் நடத்தும் திட்டமாக இருக்க வேண்டும்.

வங்கியில் கணக்கு ஆரம்பிக்கும்பொழுது எப்படி Joint A/C என்று இருக்கிறதோ, அதே போல இதிலேயேம் உண்டு. விதி முறைகள் இரண்டிலும் ஒன்றுதான்.

Thursday, June 14, 2007

24. ஆசியாவிலேயே முதல் மிகப் பெரிய, அதி நவீன மருத்துவமனை


  • தபால் துறையின் 'Speed Post' கட்டணத்தை 40 % குறைத்துள்ளது. இதனால் தபால்துறைக்கு 1400 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். போன வருடம்தான், கொரியர் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க 50% குறைக்கப்பட்டது. [வரும் வாடிக்கையாளர்களை கொஞ்சம் சிரித்த முகத்துடன் சேவை செய்ய ஆரம்பித்தாலே, இலாபத்திற்கான முதல் முயற்சியாக இருக்கும்.]

  • ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை GDP [Gross Domestic Product] மூலமாக கணக்கிடுவார்கள். வரும் நாட்களில், நம் நாட்டின் பொருளாதாரம் 10 சத வீத வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். [மகிழ்ச்சியான செய்திதான்! ஆனா, இப்பொழுது இருக்கிற அரசியல் சூழ்நிலையில உண்மையிலேயே இது சாத்தியமானு தெரியலை. டாக்டர். மன்மோகன் சிங், ப.சி மாதிரி மக்கள் ரொம்பவே எதிர்பார்க்கிற team இருந்தும், ஒண்ணும் பெரிசா பண்ண மாட்டேங்கிறாங்க! விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நம் நாட்டில் மட்டுமே நடக்கும்!]

  • உலகம் முழுவதும் விவசாயத் துறையில் 13 கோடிக்கும் அதிகளவில் குழந்தைத் தொழிலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஐந்து வயதில் இருந்தே, குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வரும் 2016ம் ஆண்டுக்குள், உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத நிலையை ஏற்படுத்த சர்வதேச அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. [தீப்பெட்டி, பட்டாசு தொழில்சாலைகளில் வேலை செய்யும், எங்க ஊரு குழந்தை தொழிலாளர்களையும் சேர்த்தா.....?].

  • தைவானில் உள்ள தாய்பேவில், "கம்ப்யூடெக்' என்ற நிறுவனம், ஒன்பதாயிரம் ரூபாய்க்கு (~ $200) மடி கணினி (Laptop Computer) யை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. [ஒன்னு வாங்கினா, ஒன்னு இலவசம்னு கொஞ்சம் நாள்ல சொன்னலானும் சொல்லுவாங்க!]

  • 300 படுக்கை வசதியுள்ள மிகப் பெரிய, அதி நவீன மருத்துவமனையை அப்போலோ மருத்துவமனை ஹைதராபாத்தில் கட்ட திட்டமிட்டுள்ளது. அதற்கு 'Apollo Health City' என்ற பெயரிட்டு உள்ளார்கள். 33 ஏக்கர் நிலம் - 11 மாடி கட்டிடம் - 100 கோடி ரூபாய் முதலீடு போன்ற மெகா திட்டம் உள்ளதாம்.
  • DLF IPO வந்த இரண்டே நாட்களில் சிறு முதலீட்டாளர்கள் 'எதிர்பார்த்ததை விட' அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

*************

"மனிதர்கள் காலில் போட்டுக்கொள்ளும் செருப்புகளும் பூட்ஸ்களும் ஏர்-கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன; வேளாண்துறையில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவை மண்டிகளிலும், வெயிலும் தூசும் நிரம்பிய சந்தைகளிலும், வீதிகளிலும் கோணியைப் பரப்பி விற்கப்படுகின்றன"

-- ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்

**************

RDல் முதலீடு செய்திருந்தால்..... எத்தனை மாதங்கள், எவ்வளவு வட்டி ஆகியவற்றைப் பொறுத்து கணக்கிட்டு கொடுக்கும் ஒரு எளிதான கருவி ( tool) :

RD Calculator

நம் அனைவருக்கும் பயன்படும் எனற நம்பிக்கையில்...

@

Tuesday, June 12, 2007

23. சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (Systematic Transfer Plan - STP) & சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் பிளான் (Systematic Withdrawal Plan-SWP)

மியூச்சுவல் ஃபண்டில் போட்ட பணத்தை திரும்ப பெறுவது பற்றி இன்னும் கொஞ்சம் விவரமா பார்ப்போமா? ஆனா, இது கொஞ்சம் வேற மாதிரி....

கவர்ச்சிகரமான பிளான்களாம் இருக்கு.

1. சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (Systematic Transfer Plan - STP)

2 சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் பிளான் (Systematic Withdrawal Plan - SWP)

சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (Systematic Transfer Plan - STP) ல ஒரே திட்டத்தில் பணத்தைப் வைக்காமல், அதை வேறு திட்டங்களில் முதலீடு செய்வது. இப்படி முதலீடு செய்வதற்கு என்ட்ரி லோடு (Entry Load) லாம் கிடையாது. (அட..!)

போன வாரம் பார்த்தோமே... சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மாதிரிதான் இதுவும். SIPல நம் வங்கியின் கணக்கிலிருந்து பணம் போகும். இதில் ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்துக்குப் பணம் போகிறது. இதற்கும் ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கொடுக்க வேண்டும்.

'எதுக்காக ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு முதலீடு பண்ணணும்?'னு யோசிக்கிறீங்களா...

உதாரணம் சொன்ன புரியலாம்.... N.F.O.ல மூலமா ஒரு திட்டத்தில முதலீடு பண்றோம் வைச்சிக்குங்க. ஆனா, நாம எதிர்பார்த்த மாதிரி அந்த திட்டம் இலாபம் தரலை... இந்த எஸ்.டி.பி (STP)ன் வழியாக ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து நல்ல இலாபமுள்ள திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

எஸ்.ஐ.பி (SIP) மாதிரி பங்குச்சந்தையின் ஏற்றம், இறக்கம் எதிலும் சாராமல் முதலீடு செய்ய முடியும். நீண்டகால அடிப்படையில் இந்த முதலீட்டின் அளவு சராசரியாக இருக்கும்.

N.F.O.வின் போது ஒரு பங்கலகின் (unit) மதிப்பு பத்து ரூபாய். அது வளர்ந்து 15 ரூபாயாக வளர்ந்திருக்கிறது. இந்த STPன் மூலம் ஆயிரம் ரூபாயை எடுத்து மற்றொரு திட்டத்துக்கு மாற்ற வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இப்போது, 100 (1000 / 10) பங்கலகுகள் எடுப்பதற்குப் பதிலாக 67 (1000 / 15) பங்கலகுகள் விற்றாலே போதுமானது.

இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, முதலில் நாம் பணம் போட்டிருக்கும் திட்டத்தில் உள்ள பங்கலகின் ஒரு பகுதியை விற்றுத்தான் நாம் சொல்லும் புது திட்டங்களில் பங்கலகுகள் வாங்குவார்கள். அதனால் அவர்கள் விற்கும் பொழுது நம் திட்டத்தின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

SWPயைப் பத்தி அடுத்ததில்..... :)

Monday, June 11, 2007

22. மியூச்சுவல் ஃபண்ட்லிருந்து பங்கு சந்தைக்கு

ஒவ்வொரு முறையும், 'இதை சொல்ல மறந்துட்டோமே' என்று நினைவுக்கு வருவது. அதனால, நினைவில் இருக்கும் பொழுதே அதைப் பற்றி பேசிவிடலாம்.....

மியூச்சுவல் ஃபண்ட்லிருந்து பங்குச் சந்தையை பற்றி தெரிந்து கொண்டு அதில் முதலீடு பண்ணலாம். அப்படிதான் எனக்கு பங்குச் சந்தையின் "அறிமுகம்" கிடைத்தது.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் இருந்து நமக்கு மூன்று மாதங்களுக்கொருமுறை அறிக்கை அனுப்புவார்கள். அந்த திட்டங்களை பற்றிய முழு விவரங்கள் இருக்கும்.... குறிப்பாக எந்தந்த பங்குகளை எவ்வளவு சதம்வீதம் வாங்கியிருக்கிறார்கள், அரசு கடன் பத்திரத்தில் முதலீடு இருக்குமெனில் அது எத்தனை சதம்வீதம் போன்ற தகவல்கள் இருக்கும். நீங்கள் Value Research Online இணையதளத்திலும் இதை கவனித்திருக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அனுப்பும் அறிக்கைகளில் அவர்கள் எந்ததெந்தப் பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதை கவனிக்க ஆரம்பித்தேன்... அந்த பங்குகளை என்னுடைய 'Watch List'ல் சேர்த்து தினமும் அந்த பங்கின் ஏற்ற இறக்கங்களை கவனித்து வந்தேன். சில நாட்கள்/மாதங்களுக்குபின் அந்த பங்கின் விலை குறையும் பொழுது சில பங்குகளை வாங்கினேன்.

இதில் சில பிரச்சனைகள் இருப்பதை பின்பு தெரிய வந்தது....

அதாவது அவர்களின் அறிக்கைகள் நம் கைக்கு கிடைக்கும்பொழுது பங்கு சந்தையின் சூழ்நிலை மாறியிருக்கலாம். நிறுவனங்கள் பங்குகளை வாங்கும்பொழுது ..... மொத்தமாக (Bulk) வாங்குவார்கள். அதனால் அவர்கள் வாங்கிய விலை வேறாக இருக்கும்.

ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் மேலாளர் பின்பற்றும் 'ஒழுக்கமான' முதலீடு கொள்கையை நாம் கற்று கொள்ளலாம்தானே! எந்த அடிப்படையில் பங்குகளைத் தேர்ந்து எடுக்கிறார்கள், எந்த செக்டார் பங்குகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

உதாரணத்திற்கு....



SBIயின் Magnum Global ஃபண்டை எடுத்துக் கொள்வோம். ஐந்து நட்சத்திரமுள்ள Equity Diversifyed வகையின் கீழ்லுள்ள நல்ல திட்டம். அதாவது இந்த ஃபண்டின் Portfolio Summary யை கவனித்தால்...

இவர்களின் முதல் ஐந்து பங்குகள்:

Infotech Enterprises, Shree Cement, Thermax, Bharat Earth Movers, Jai Prakash Associates

மற்றும்

எந்தந்த செக்டார்லில் அதிக சதவீதம் முதலீடு என்று கவனித்தால்

என்ஜினியரிங்(14.43%), கட்டுமானத்துறை (13.90%), தொழில் நுட்பத்துறை(8.90%) போன்ற செக்டார்களில் உள்ள பங்குகளில் அதிகம் முதலீடு செய்துள்ளார்கள்.

சரி.. அப்படினா... நேரிடையாவே பங்குசந்தைல முதலீடு பண்ணலாமே? எதுக்கு மியூச்சுவல் ஃபண்ட்ல் முதலீடு செய்யணும்கிற கேள்வி நமக்கு [அடிக்கடி] வரலாம்.

பங்குச் சந்தையின் 'கரடி' முகத்தின்போதும் நமக்கு நஷ்டம் அதிகமாக இருக்கும். ஆனால், அப்படிபட்ட சூழ்நிலையில் மியூச்சுவல் ஃபண்டில் அந்த நஷ்டம் ஓரளவு குறையும். நல்ல திட்டத்தின்கீழ் உள்ள மியூச்சுவல் ஃபண்ட்டாக இருந்தால், பங்குச் சந்தையின் வீழ்ச்சியைவிட பங்கலகின் நிகர சொத்து மதிப்பின் (N.A.V) வீழ்ச்சி குறைவாகத்தான் இருக்கும்......... இருக்கு வேண்டும்.! அப்பொழுதுதான் அது நல்ல திட்டம்!!

மீண்டும் மீண்டும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது: பங்குச் சந்தையின் தாக்கம் மியூச்சுவல் ஃபண்ட்களிலும் பிரதிபலிக்கும். ஆனால், திட்டத்தைப் பொறுத்தும், ஃபண்ட் மேலாளரின் நிர்வாகத் திறனைப் பொறுத்தும் அளவு மாறுபடும்.

Friday, June 8, 2007

21. பங்குச்சந்தையில் - 'சிவாஜியும், தசாவதாரமும்' !!

வாழ்த்துக்கள்!!

இந்த வாரம் (ஜீன் 1-15) நாணய விகடனில், செல்லமுத்து குப்புசாமி அவர்களின் "ஷேர் மார்க்கெட் சிங்கம்!" என்ற புதிய தொடர் ஆரம்பமாகியுள்ளது. வாரன் பஃபெட்னின் பங்குச் சந்தைப் பயணத்தை பற்றி பல பயனுள்ள சுவையான தகவல்கள் கிடைக்கும் என நம்பலாம். அவருக்கு நம் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

*******


  • இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை (NSE), பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. NSE பட்டியலிலுள்ள மொத்த நிறுவனங்கள்: 1244. முதல் இடம்: போலந்தின் வார்சாவ் பங்குச் சந்தை, இரண்டாவது இடம்: மால்டா பங்குச் சந்தை. நாஸ்டாக் (Nasdaq)லாம் நமக்கப்புறம்தான். [இந்தியா ஒளிர்கிறதோ?!]
  • 2007, மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஓராண்டு காலத்தில் மும்பை பங்குச் சந்தை சுமார் 18 % வருமானமும், சீனப் பங்குச் சந்தை (சாங்காய் காம்போசிட்) 150% மேல் வருமானமும் (அள்ளிக்) கொடுத்திருக்கிறது. [எந்த அடிப்படையில் நம்முடைய பொருளாதாரத்தை, சீனாவுடன் ஒப்பிட்டு பார்க்கிறோம்னு தெரியலை?... ம்ம்ம் அவுங்க எங்க..நம்ம எங்க...?! ]
  • UTI மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் விரைவில் சிங்கப்பூர், துபாய், பக்ரைன், இலண்டன் போன்ற இடங்களில் தம்முடைய கிளைகளை துவக்க போகிறது. [சிங்கப்பூர் மற்றும் கிடேசன் பார்க் நண்பர்களுக்கு இது பழைய செய்தியாக இருக்கலாம்?!]
  • நாணய விகடனில் சிறந்த 10 பங்குகள் மற்றும் சிறந்த 10 ஈக்விட்டி டைவர்சிஃபைட் குரோத் (G) ஃபண்டுகள் பரிந்துரைத்துள்ளார்கள். [அதில் மாருதி, லீலா ஹோட்டல்ஸ் பங்குகளையும் மற்றும் சுந்தரம் Mid Cap ஃபண்டையும் சேர்த்து கொள்ளலாம்!]
  • அவிவா (Aviva Life Insurance) காப்பீடு 'அவிவா தன்விருதி' என்ற புதிய திட்டத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 80C மற்றும் 10(10D) ன்படி வரிவிலக்கு உண்டு. [இந்த திட்டத்தை பற்றி யோசிக்கலாம்!]
  • 2-3 வருட முதலீட்டின் அடிப்படையில் Meghmani Organics IPOல் முதலீடு செய்யலாம். அதிக பட்ச விலை 19 ரூபாய். குறைந்தது 350 பங்குகளாவது வாங்க வேண்டும். [ஓ.. இன்று, ஜீன் 8தான் கடைசி நாளோ? சந்தைக்கு வந்த பின் இதில் முதலீடு செய்யலாம். நல்ல முதலீடு என்பது எனது எண்ணம்]

*******

‘‘நாம் ஒருபக்கம் சம்பாதித்தால், நாம் செய்த முதலீடுகள் மறுபக்கம் சம்பாதித்துக்கொண்டே இருக்க வேண்டும். எனவே, முதலீடுகள் சிறிதாக இருந்தாலும் சரி, பெரிய அளவில் இருந்தாலும் சரி... அது வளர்ந்து வருகிறதா இல்லையா எனக் கவனித்து வரவேண்டியது அவசியம்"
-- சொன்னவர் "பஜாஜ் கேப்பிட்டல்" நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜார்ஜ் தாமஸ்.

*******

பங்குச்சந்தையில்: 'சிவாஜியும், தசாவதாரமும்'

ஐ.சி.ஐ.சி.ஐ. (ICICI) தன் IPOவின் மூலம் 20,000 கோடி ரூபாய் திரட்டப் போவதாக அறிவித்துள்ளது. ஒரு IPOவுக்கு இது மிகப்பெரிய தொகை.

அதேபோல சந்தைக்குள் நீண்டகால போராட்டத்துக்குப் பிறகு வரும் IPO, டி.எல்.எஃப் (D.L.F). இது கட்டுமானத்துறைக்குப் பெரிய பலமாக இருக்கும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

முதலில் 13,600 கோடி (136 பில்லியன்) ரூபாய் திரட்டப் போவதாக இருந்தார்கள். இப்பொழுது 9,625 கோடி ரூபாய் போதுமென்று(!) முடிவு செய்துள்ளார்கள்.

ஒரு பங்கின் விலை: Rs 500 - 550
ஆரம்ப தேதி : ஜீன் 11, 2007

கடைசி நாள்: ஜீன் 14, 2007

திரட்டப்படம் பணத்தில் 3,500 கோடி ரூபாய் இந்தியாவின் பல இடங்களில் நிலங்களை வாங்கவும், 3,400 கோடி ரூபாய் கட்டுமானத்துறை வளர்ச்சிக்கும் செலவிடபோவதாக திட்டமிட்டுள்ளார்கள்.

இப்போதைக்கு இவர்களின் வரவையே பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

@

Wednesday, June 6, 2007

எஸ்.ஐ.பி (S.I.P) -- சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் ப்ளான்

மற்றொரு இணையதளம் Mutual Funds India. நேரம் கிடைக்கும்போது இங்கேயும் போய் பாருங்க...

இப்ப ICICI Direct இணைய வழி (on-line)ல கூட மியூசுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு நட்சத்திர குறியீடு போடுகிறார்கள். பரவாயில்லை...!

ஃபண்ட்களில் முதலீடு பண்ணியாச்சி. எந்தந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும் என்று நாம் தெரிந்தகொண்டபின், நாம் முதலீடு செய்த ஃபண்ட்களில் எவ்வாறு திட்டமிட்டு (மீண்டும்) முதலீடு செய்யலாம்?

உதாரணத்துக்கு, பங்கலகு (unit) விலை குறைவாக இருக்கும்போது 1000 ரூபாய்க்கு முதலீடு செய்தால் அதிகம் கிடைக்கும். அதேசமயம் விலை அதிகமாக இருக்கும்போது குறைவானவைகளே கிடைக்கும். இல்லையா?

விளைவு...? சந்தை வீழ்ச்சியின்போது நம் கணக்கின் மதிப்பில் அதிக பாதிப்பு இருக்காது. அந்த நேரத்தில் இன்னும் பங்கலகு வாங்கி நம் முதலீட்டை அதிகப் படுத்தி கணக்கின் மதிப்பை கூட்டியிருக்க வேண்டும்.

அதற்கு நமக்கு உதவுவதுதான் எஸ்.ஐ.பி(S.I.P) என்ற சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் ப்ளான். பொதுவாக சந்தையில் விலை குறையும் பொழுது ஒரு பொருளை வாங்குவது நல்லது. அதுதான் புத்திசாலித்தனமும்கூட! அதுதான் மியூசுவல் ஃபண்ட் திட்டங்களுக்கும் பொருந்தும்.

அதாவது ஒழுங்காகத் திட்டமிட்டு முதலீடு செய்ய நமக்கு வழிசொல்லும் திட்டம்தான் எஸ்.ஐ.பி (S.I.P) . மாதாமாதம் முதலீடு செய்வதற்கென ஒரு சிறு தொகையை ஒதுக்கினால் போதும். அது 500 ரூபாயாகக்கூட இருக்கலாம். சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் 100 ரூபாய்கூட [சரவண பவனில் ஒரு அளவுசாப்பாடு !!?] எஸ்.ஐ.பில் முதலீடு செய்யலாம் என்று 'கவர்ச்சி'கரமாக்கியுள்ளது.

சரி.. இந்த திட்டத்தால் என்ன பயன்?

பங்குச் சந்தை அல்லது மியூசுவல் ஃபண்ட் திட்டங்களில் நம் அனைவரின் ஆசையே 'மிகக் குறைந்த விலையில் வாங்கி, அதிகமான விலைக்கு விற்க வேண்டும்' என்பதுதானே?! இது எப்படி சாத்தியம்? எப்படி தெரிந்து கொள்வது?

'இதுதான் குறைந்தபட்ச விலை என்றோ அல்லது இதுதான் இலாபமானது ... இதற்கு மேல் ஏறவே ஏறாது' என்றோ நம்மில் யாராலும் கணிக்க முடியாது! [ வாரன் பஃபெட் (Warren Buffett) போன்ற பெரிய பெரிய 'தலை'களுக்கே கண்ணைக் கட்டிக்கொண்டு வரக்கூடியது..@#!]

அதனால்தான் எஸ்.ஐ.பி (S.I.P) திட்டம் மிகவும் பயன்கூடியது.

ஏற்கெனவே நாம் முதலீடு செய்த திட்டங்கள் அல்லது புதிதாக சந்தைக்கு வரும் ஏதாவது ஒரு நல்ல திட்டத்தை தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்யலாம்.

இதற்கு ஒரு படிவம் உண்டு. அந்த படிவத்தில்,
  • எந்த திட்டம்
  • மாதாத்திற்கொரு முறையோ, காலாண்டுக்கு ஒருமுறையோ ... நம் வசதியைப் பொறுத்து எவ்வளவு பணம் மற்றும்
  • வங்கி விவரங்கள்

நிரப்பி கொடுத்தால் போதும். நாம் குறிப்பிட்ட முறையில் நேரடிடையாக நம் வங்கி கணக்கிலிருந்து குறிப்பிட்ட திட்டங்களின் பங்கலகு நம் கணக்கில் கிடைக்கும்.

அன்றைய தேதியின் பங்கலகின் விலையை [NAV] பொறுத்து நாம் குறிப்பிட்ட ரூபாய்கான பங்கலகு நம் கணக்கில் வரவு வைத்துவிடுவார்கள். அந்த திட்டத்தின் NAVயைப் பொறுத்து .... ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப நம் கணக்கின் (முதலீடு) மதிப்பும் இருக்கும்.

சிறுக சிறுகச் சேமித்து வாழ்க்கையை வளமாக்குவோம்! சிறுதுளி பெரு வெள்ளம் தானே!!

Monday, June 4, 2007

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் தரங்களைப் பற்றி சொல்லும் மற்றொரு இணையதளம்: "வேல்யூ ரிசர்ச் ஆன்லைன்"

மியூச்சுவல் ஃபண்ட்களின் தரங்களைப் பற்றி சொல்லும் மற்றொரு இணையதளம் "வேல்யூ ரிசர்ச் ஆன்லைன்".

'மதன் திரைப்பார்வையில்' இறுதியில் இரண்டு நட்சத்திரம், மூன்று நட்சத்திரம் என்று குறிப்பிடுவது போல [மதன் எல்லா குப்பை படங்களுக்கும் மூன்று நட்சத்திரம்தான் போடுவார்கிறது வேற கதை..] இந்த இணைய தளம் மியூச்சுவல் ஃபண்ட்களைத் தரம் பிரித்து நட்சத்திர குறியிடுகளை பயன்படுத்துகிறார்கள். அதனால், நமக்கு மிக எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு திட்டம் எத்தனை நட்சத்திரங்கள் பெற்றிருக்கிறது என்பதைப் பார்த்தாலே நமக்கு எளிதில் புரிந்து விடும் - அது முதலீடு செய்வதற்கு ஏற்றதா இல்லையாயென்று....

ஏறக்குறைய 500 (அதற்கும் மேலேயும் இருக்கலாம்) மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை தரம்பிரித்து தங்கள் இணையதளத்தில் வெளிடுகிறார்கள். ‘மியூச்சுவல் ஃபண்ட் இன்சைட்’ என பத்திரிகையிலும் வெளிடுகிறார்கள். நாம் ஏற்கனவே அறிந்ததைப் போல http://www.valueresearchonline.com/ என்ற இணைய தளத்தில் இலவசமாகவே பதிவு செய்துகொள்ளலாம். மின் அஞ்சல் மூலமாக மாதம் ஒரு முறை நமக்கு விவரங்களை அனுப்பி வைக்கிறார்கள்.

சமீபத்தில் சந்தைக்கு வந்த ஃபிடலிட்டி, ஏ.பி.என் ஆம்ரோ, கோட்டக், பாரத ஸ்டேட் வங்கி, டாடா போன்ற பிரபல திட்டங்களில் இவர்கள் இன்னும் தரம் பிரிக்கவில்லை. ஏன்?

குறைந்தபட்சம் நடைமுறைக்கு வந்து மூன்று ஆண்டுகளாவது ஆகியிருக்கவேண்டும் . இந்த குறைந்தபட்ச காலக் கெடுவுக்குப் பின் அவை மதிப்பிடப்பட்டு இந்த இணையதளத்தில் நட்சத்திர குறியிடு தரம் வழங்கப்படுகிறது.


***** (5 நட்சத்திரம்) - அருமையான திட்டங்கள் == CRISIL CPR~1

**** ( 4 நட்சத்திரம்) - நல்ல திட்டங்கள் == CRISIL CPR~2
..............
.............

* ( 1 நட்சத்திரம்) - படு சுமார் == CRISIL CPR~5

இதை நினைவில் வைத்துகொண்டால் திட்டங்களை பார்த்தவுடன் முடிவு செய்ய எளிமையாக இருக்கும்.

முதலீட்டாளர்களுக்கு முக்கியமான செலவுகள்.....

நுழைவுக் கட்டணம் (Entry Load) மற்றும் வெளியேறும்போது கொடுக்கும் கட்டணம் (Exit Load).

இவைகளையும் தங்களுடைய மதிப்பீட்டில் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள் என்பது முக்கியமான விசயம்.

இதைப்போல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் P.E. Ratio மற்றும் PB Ratio [Price to Book Value Ratio] வும் வெளியிடுகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

P.E. Ratio: . அதாவது ஒரு பங்கலவு (unit) விலையோடு அதன் மீதான வருமானத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது.

PB Ratio [Price to Book Value Ratio]: ஒரு பங்கலவு (unit) மதிப்போடு அதன் புத்தக மதிப்பை ஒப்பிட்டுப் பார்ப்பது.

குறிப்பு: வரவேற்போம்...!

‘அமிழ்து’ என்பவர் தன் பங்குசந்தை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள புதிதாய் ஒரு வலைப்பூவினை ஆரம்பித்துள்ளார். அவருக்கு நம் வாழ்த்துக்களும், நல்வரவும்....

Friday, June 1, 2007

மியூச்சுவல் ஃபண்ட்களின் தரம் ஆராய்ந்தல் பற்றி...

CRISIL இணையதளம் பயனுள்ளதாக இருந்தது என மின் அஞ்சலின் மூலமாகவும் மறுமொழி சொன்ன அன்பர்களுக்கு என் நன்றிகள்.. மற்றும் CRISIL இணையதளத்துக்கும்!

முதல் பகுதி இங்க...

சரி... ஆராய்ச்சினா எந்த மாதிரி? கீழ் உள்ள பட்டியல் - சிலவைகள் மட்டும் எளிமை படுத்தி....

  • ஒப்பீட்டு பங்குகளைத் தேர்வு செய்யும்போது, மற்ற ஃபண்ட்களைக் காட்டிலும் நல்ல லாபம் தரக்கூடியதாக இருக்கிறதா...?
  • பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களில் இந்த திட்டங்களின் NAV கூடுகிறதா, குறைகிறதா? இலாப, நஷ்டம் எப்படி?
  • ஃபண்ட் திட்டத்திலுள்ள பங்குகள் என்னைன்ன துறைகளில் இருக்கிறது, அதன் செயல் பாடுகள் எப்படி?
  • ஃபண்டின் முதலீடு தரம் - உதாரணத்திற்கு அரசு கடன் பத்திரங்களின் அடிப்படையில் இருக்கும் பட்சத்தில் அதன் தரம் எப்படி?
  • ஃபண்டின் மொத்த சொத்து மதிப்பு என்ன ?

இதுபோல காரணங்களை அடிப்படையாக வைத்துதான் ஃபண்டின் தரத்தை முடிவு செய்வார்கள்.

ஆம்... நீங்கள் எண்ணியது போலவே....

ஃபண்ட் மேலாளர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அவர்கள் முதலீடு செய்ததில் எது சரி, தவறு என்று 'ஓரளவு' தெரிந்து கொள்ள முடியும்.

இதலாம் எதுக்கு நாம் தெரிஞ்சுக்கணும்? CRISIL எந்த மாதிரி ஃபண்ட்களின் தர வரிசை படுத்துறாங்கனு (ஓரளவு) புரிஞ்சிகிட்டா எந்தளவு இதை நம்பி முதலீடு செய்யலாம்கிற காரணம் ஒருபுறம் இருந்தாலும்...... நமக்கே ஒரு அறிமுகம் அல்லது தெளிவு கிடைக்க ஒரு வாய்ப்பு என்ற நம்பிக்கையிலும்தான்...